அமிர்த தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

அமிர்த  தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

திங்கள், 15 ஜூலை, 2013

சீதாராம் மந்திரம்


சீதாராம் மந்திரம்  காலம்,தூரம்,தூய்மை எல்லாவற்றையும் கடந்த ஒரு அற்புதமான மந்திரம், ராம் என்பது அகமும்,புறமும் நிறைந்த ,எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் உணர்வான,சர்வ வியாபியான ஆண் சக்தியைக் குறிப்பதாகும். சீதா என்பது உலகின் சக்தி அல்லது ஆற்றல் வடிவமான பெண் சக்தியைக் குறிப்பதாகும்.

சத்தியமே வடிவான ,தர்மமே உருவான ராமன் என்கிற தெய்வ உணர்வு ,சீதா என்கிற குண்டலினி சக்தியோடு ஐக்கியமாகி ,ஆன்மீக விழிப்புணர்வையும் , ஜீவாத்மா பரமாத்மாவோடு கலக்கும் ஒரு தெய்வீக அனுபவத்தையும் அளிக்கிறது .இந்து மதத்தில் ராமன்  ஒரு மரியாதைப் புருஷோத்தமனாக ,அதாவது ஆண்களிலேயே உத்தமனாகவும் ,அவன்  பத்தினியான சீதா  தேவி பெண்மையின் சிறந்த எடுத்துக் காட்டாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள் . இவர்கள் இருவரும் சாதாரண மானிடப் பிறவிகள் அடைய முடியாத ,முழுமையின் ,நிறைவின் உச்சத்தைத் தங்கள் உன்னத குணங்களால் அடைந்து  உதாரண வாழ்க்கைக்குச் சான்றாக விளங்கினார்கள்

ராம் என்பது நம்  உடலில்  மணிபூரக சக்ரம் அதாவது  சூரிய முடிச்சின் பீஜ மந்திரம் என்று கருதப்படுகிறது. சீதாராம் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பொழுது ,நம் உள்ளே ஒரு ஜ்வாலை எரிந்து ,நம் உடலின்,மனதின்,கர்ம வினைகள் அனைத்தையும்  தூய்மைப் படுத்தி விடும் . அது மட்டுமல்லாமல் ,இந்த அற்புதமான சீதாராம மந்திரம் நமக்கு நேர் வழியைக் காட்டி ,எந்த ஒரு அறிய  செயலையும் செய்வதற்கு வேண்டிய  மன திடத்தையும் ,ஞானத்தையும் அருள வல்லது . .பூமித்தாயின் குழந்தையாகத் தோன்றிய சீதா தேவி நம் உடலில் மூலாதாரச் சக்ரத்தின் அம்சமாக விளங்குகிறாள் . அதனால் பஞ்ச பூதங்களில் ஒன்றான  ப்ருத்வி எனப்படும் மண் தத்துவமாக விளங்கும் சீதா தேவி ,நம் உடலில் மூலாதார சக்கரத்தில் குண்டலினி  சக்தியாக அமைந்துள்ளாள் .

எனவே சீதாராம் மந்திரத்தின் ஜபத்தினால் நம் உடலில்  மூலதாரத்தில் ஏற்படும் ஆன்மீக அதிர்வுகளானது ,சீதா பிராட்டியின் அனுக்ரஹத்தால் நமக்கு நலத்தையும் ,வளத்தையும் குறைவின்றி வழங்க வல்லது . இதில் சிறிதும் சந்தேகமில்லை .

இப்படி தொடர்ந்து சீதாராம் மந்திரத்தை உச்சரித்து ஜபித்து வந்தால் ,நம்மை ஆன்மீகத்தின் ஆழத்திற்கு அழைத்துச் சென்று ,இறைவனைத் தேடும் நாட்டத்தை அதிகமாக்கும். நாம் மனதில் சீதாராம்  சீதாராம் என்று ஸ்மரணை செய்து கொண்டே இருந்தால் ,நம்முடைய நாடிகளில் ,சக்கரங்களில்  நேர்மறையான தெய்வீக அதிர்வுகள் உண்டாகி அவற்றை தூய்மைப் படுத்தி  அவற்றில் லயம் ஏற்படுகிறது .  தூய்மை என்பதை ,விஞ்ஞான முறையில் சொல்வதானால் ,இந்த அதிர்வுகள் நம் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி ,குறைபாடுகளைச் சரி செய்து சமன் படுத்துகிறது. .இப்படி செய்யச் செய்ய ஒரு ஆழந்த அமைதியும் ,ஓய்வும் கிடைக்கின்றது .தொடர்ந்து இப்படி மந்திர ஜபம் செய்யும்பொழுது  வழக்கமாகத் தோன்றும் மன அழுத்தம் ,மன இறுக்கம் இவை எல்லாம் குறைந்து ,கரைந்து ,மயிலிறகாய் மனம் லேசாகி விடுகிறது .

நம்முள்ளே குடியிருக்கும் எதிர்மறை வினைகள் எரிந்து அழிந்து  ,ஒரு ஆனந்த நிலை மலர்கின்றது . இடைவிடாமல் ,அனவரதமும் ,முறையானபடி சீதாராம் சீதாராம் என்று ஸ்மரணை செய்து கொண்டே  இருந்தால் ,நமக்கு உற்சாகமும் ,உயிர்த்துடிப்பும் ,ஆனந்தமும் எல்லையில்லா அளவில் சித்தித்துக் கொண்டே இருக்கும் . இறைவனிடம் அன்பும் பக்தியும் பெருகிக் கொண்டே இருக்கும் .நம்முடைய அஹங்காரம் கரைந்து உருகிக் காணாமல் போய் விடும் . சுருக்கமாகச் சொன்னால் ,இந்த உலகத்தில் நம்முடைய தினசரி வேலைகளைக் ,கடமைகளை , மனத்தில் அழ்ந்த அமைதியுடனும் ,பரவசத்துடனும் ஆற்றும் திறன் படைத்தவர்கள் ஆகி விடுவோம்.

இந்த அத்புதமான மந்திரத்தின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இறைத் தன்மையின் எதிர்மறை நிலையாம் பெண்ணின் தோற்றமாக சீதாவும் ,நேர்மறை நிலையாம் ஆணின் தோற்றமாக ராமனும் கருதப் படுகிறார்கள் . .அதனால் தான் இந்த சீதாராம் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பொழுது நமக்குள் ஆண் தன்மையும் பெண் தன்மையும் சம நிலை பெறுகிறது . நம்முடைய மூளையின் இரு பகுதிகளும் சம நிலையடைந்து ஸ்திரமாக உறுதியாகிறது . இந்த நிலையில் மனம் என்ற குரங்கு அடங்கி ,மனம் அமைதியடைந்து ,நாளடைவில் ,நம் புலன்கள்  அனைத்தையும் மூளைத் தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிகிறது. .நம்முடைய நடத்தையும் தனித்தன்மையும் முழுமையான வளர்ச்சி பெற்றுத் திகழும் அற்புத நிலை ஏற்படும். .நாம் நினைப்பதைச் சொல்லி சொல்வதைச் செய்யும் வகையில் நம் எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஒரு லயத்தில் இயங்கும் தன்மை பெறுவோம் . குணத்திலும் நடத்தையிலும் ஒரு நேர்மை காணப்படும். நாம் நடந்து கொள்ளும் விதம் நிலைத்தன்மை உடையதாக ,போலித்தனம் இல்லாமல் ,பாசாங்கு அற்றதாக இருக்கும் .

நமக்குள் இருக்கும் ஆற்றல் மேலும் மேலும் வளர்ந்து பூரணமாக ஆகும் .சீதாராம் நமக்கு உலக மற்றும் ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் .முன்னேற்றத்தையும் மங்களத்தையும் வழங்கும் அருள் மந்திரமாகும் .

சீதாராம் மந்திர அதிர்வுகள் நம்மைச் சூழ்ந்துள்ள எதிர்மறை வினைகள் எல்லாவற்றிடம் இருந்தும் ஒரு உறுதியான கவசமாக அமைந்து நம்மைக் காக்கிற ஆற்றல் படைத்தவை.
வரக்கூடிய ஆபத்துக்கள் ,நிகழக் கூடிய விபத்துக்கள் ,தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் எல்லா நேரங்களிலும் நம்மைக் காப்பாற்றும் சக்தி படைத்தவை .

சீதாராம் மந்திரத்தின் சக்தியும் ஆன்மீக அதிர்வுகளும் ஒரு மனிதனை நல் வழியில் முழுவதுமாக மாற்றக் கூடியது . இந்த மந்திரத்தைச் சொல்பவரின் உள்ளத்து அமைதியும் ஆனந்தமும் அவர் முகத்தில் ஆச்சரியமான பொலிவைக் கொடுத்து பிரகாசிக்கச் செய்யும்.

இப்படியாக இந்த சீதாராம் மந்திர ஜபத்தினால் ,நல்ல உடல் நலம் ,மன அமைதி ,எண்ணங்களில் சமநிலை ,அளவற்ற செல்வம் ,மேம்பட்ட உறவு நிலைகள் ,ஆத்மாவுடன் இறைவனின் ஐக்கிய நிலை இவ்வளவும் கிடைக்கப் பெற்று வாழ்க்கையே ஒரு நிறைவுத் தன்மையை அடையும் . .இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியில் தன்னைத் தானே உணர்கின்ற ஒரு உயர்ந்த நிலையை அடையலாம்.
                                 
                                                        சீதாராம்!

With thanks for translation to Mrs Meena Ram

ஞாயிறு, 14 ஜூலை, 2013

சத்தியம் பேசு இனிமையாகப் பேசு

 உண்மை பேசுதல் என்பது ஒரு நற்குணம்; நற்பண்பு ; நல்ல வாழ்க்கை நெறி என்று உலகிலுள்ள அனைத்து மதங்களும் போதிக்கின்றன .

உண்மையும்  கடவுளும் ஒன்றேதான் .இப்படியும் சொல்லலாம் .உண்மை தான் கடவுள் .கடவுள் தான் உண்மை .வேறு வேறல்ல .உண்மை அல்லது சத்தியம் நிலையானது .மாற்றத்திற்கு உட்படாதது . .எனவே தான் உண்மை பேச வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது .

உண்மை பேசுவதில் பல நன்மைகள் ,பல சௌகரியங்கள் உள்ளன . அதில் முக்கியமானது ,நாம் உண்மையை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது . ஏனென்றால் உண்மை மாறுவதில்லை . அதோடு ,யார் யாரிடம் என்னென்ன பொய்கள் எப்போது சொன்னோம் ,உண்மை சொல்வதாகச் சொல்லி எதை எல்லாம் மறைத்தோம் என்றெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தேவை இல்லை . ஆனால் ,பொய் பேசுபவர் இவை அனைத்தையும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவர் . 

இன்னும் சிலர் வெளிப்படையாகப் பேசுவதாக  நினைத்து உண்மை  பேசுவார்கள்.பல நேரங்களில் எதிராளியை தாழ்த்திப் பேசும் நோக்கத்தோடு  அல்லது அவர்களைப் புண்படுத்தும் எண்ணத்தோடு மனதில் நினைப்பதை உண்மை என்ற பெயரில் வெளிப் படுத்துவார்கள் .

இதில் இன்னும் வருத்தம் தரக் கூடிய விஷயம் என்னவென்றால் ,பேசுவதற்கு முன்பே அவர்களிடம் இப்படிச் சொல்லி விடுவது :-"நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்காதீர்கள் " அப்படியென்றால் அவர்கள் தவறாக நினைக்கக் கூடிய ஒன்றைத்தானே சொல்லப் போகிறார்கள்.இதில் எதிராளி வருத்தம் தானே அடைவர் . 

உண்மையைப் பேசும் பொழுது எப்பொழுதும் அதில் அன்பும் இனிமையும் கலந்து இருக்க வேண்டும் .நீங்கள் பிறரிடம் மரியாதையும் அன்பும் உடையவர் என்றால் ,உங்கள் வார்த்தைகளில் வெறுப்பு ,காழ்ப்புணர்ச்சி ,பிறரைத் தாழ்வாக நினைக்கும் எண்ணம் இவை எதுவுமே இடம் பெறாது .

சரியான விதத்தில் சொல்லப்படும் உண்மைக்கு காயங்களை ஆற்றும் வல்லமை உண்டு.மன மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உண்டு .அன்பும் மரியாதையும் கலந்து பேசப்படும் உண்மையில் பணிவு நிறைந்து இருப்பதால் அதில் வலி உண்டாக்கும் கடுமை இருக்காது . உண்மை பேசுவதற்கு  மரியாதை கலந்த ஒருமென்மையான  மனப்பான்மை தேவை.உண்மை வலிமையானது .அதனால் உண்மையைக் கூற உரத்து குரலெழுப்பத் தேவை இல்லை.எப்பொழுது எங்கு  நன்னெறிகளும் ,கோட்பாடுகளும் கேள்விக்குறியாகிப் போகிறதோ ,அங்கு உண்மையை வலிவுடனும்,திடமாகவும் ,உறுதியுடனும் எடுத்துக் கூறலாம். 

பெற்றோர் பிள்ளைகளை உண்மையே  பேசும்படி அறிவுரை கூறுகிறார்கள்.பள்ளிகளில் மாணவ சமுதாயத்திற்கு உண்மையைப் பேசச் சொல்லி கற்றுத் தரப்படுகிறது .சமுதாயத்தில் நம்முடைய பல வேலைகளுக்காக பல படிவங்கள் நிரப்ப வேண்டியிருக்கிறது .அவற்றில் உண்மைக்கான ஒப்புதல் கேட்கப்படுகிறது .இதிலிருந்து உண்மை என்பது  சட்டப்படியான தார்மீகமான ஒரு கட்டாயமாக கருதப் பட்டு வருகிறது .கட்டாயமாக்கப்பட்ட எதுவும் கண்ணோட்டங்களில் ,புரிந்து  கொள்ளுதலில் ,கருத்து விளக்கங்களில் வேறுபாடுகள் நிறைந்ததாகவே காணப்படும் .

உண்மை பேசுவதை ஒரு  நற்பண்பாக ,நல்லொழுக்கமாகக் கருதும் மனிதனுக்கு உண்மை பேசுவது மிக எளிதாக சாத்தியமாகும். உண்மை பேசுவது ஒருவருடைய தனிப்பட்ட இயல்பாகும்  வெளிப்புற தூண்டுதலாலோ உந்துதலாலோ இந்த குணம் தோன்றாது ; வளராது . எனவே உண்மை பேசுவதும் ,உண்மையைப் பின்பற்றுவதும் சுலபமான வழியாகும் . உண்மை பேசுவதை ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்து வாழ்வது ஒரு சிறந்த வாழ்க்கை நெறியாகும் .. மரியாதையும் இனிமையும் சேர்ந்து உண்மை பேசப்படும் பொழுது அதுவே ஒரு வாழ்க்கை முறையாகி விடுகிறது .  .அப்பொழுது வாழ்க்கையின் இயல்பு மதிப்பு அதிகரித்து பூரணத்வம் அடைகிறது.

உண்மையின் நிலைப்பாடு ஒன்றாக இருந்தாலும் ,அதன் மீது ,நம்முடைய மனநிலை ,விருப்பு -வெறுப்பு ,புரிந்து கொள்ளும் தன்மை ,திறன் இவற்றின் வண்ணங்கள் பூசப் படுகின்றன . இதனால் என்ன ஆகிறது ? ,பிறருக்கு உண்மை என்று தெரிவது , முழு விவரமும் தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களுக்கு தெரியாமல் போகிறது .

நிறைவாக மேலே குறிப்பிட்டவற்றைத் தொகுத்து சொன்னால் ,"அன்பும் ,இனிமையும் மரியாதையும், பணிவும் கூட்டி உண்மை பேசும் பொழுது ,நம் உள்ளத்தின் ஒளி இன்னும் சுடர் விட்டு பிரகாசித்து வெளிச்சம் தரும் "

                                                         சீதாராம் !

with thanks for translation to Mrs Meena Ram

சனி, 13 ஜூலை, 2013

பயமே முன்னேற்றத்தின் திறவுகோல்


பொதுவாக ஒரு மனிதன் அடிப்படையில் நல்லவனாக ,கடமையைச் செய்பவனாக ,தன குடும்பத்தின் மீது அன்பும் பாசமும் உள்ளவனகத்தான் இருக்கிறான் .தன் குடும்பத்தை ,தன் சமூகத்தை ,தன் தாய் நாட்டை நேசிக்கிறவனாய் பேணிக் காப்பவனாய் நடந்து கொள்கிறான் . சுருக்கமாகச் சொன்னால் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைத்  தவறாமல் நிறைவேற்றுகிறான் .

 புற வாழ்வில் தன்னுடைய சுய முன்னேற்றத்திற்கும் ,சுய வளர்ச்சிக்கும்  தனக்கு எது நல்லது என்பதை அறிந்து நடக்கும் மனிதன் ,அக வாழ்வில் உணர்வு பூர்வமாக எப்போதாவதுதான் செயல் படுகிறான்.

ஆரோக்கியமான உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகக் கடினமான ஒரு செயலாகும் .ஏனென்றால் பழக்கப்பட்ட ஒன்றை மாற்றிக் கொள்வது என்பது எளிதல்ல. மனம் மாற்றத்தை ஏற்க மறுக்கிறது. உதாரணத்திற்கு, உடற்பயிற்சி ஒருவருக்கு நல்லது என்று நன்கு தெரிந்தும் , தினமும் நடைப் பயிற்சி செய்வதைக் கடினமாகக் கருதுகிறார். இன்னும் சொல்லப் போனால் ,ஒருவருடைய உடல் ஆரோக்கியத்துக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை என்று மருத்துவர் எச்சரிக்கை செய்தும் கூட ,அந்த மனிதருக்கு உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிப்பது முடியாத ஒன்றாக இருக்கிறது .  உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. கடைசியில் நோயின் தீவிரமும் அதன் விளைவாக ஏற்படும் வலியும் ,தாக்கமும் தான் ஒரு மனிதனுக்கு மாற்றத்தின் அவசியத்தை உணர்த்துகிறது . சில வேளைகளில்  உயிருக்கு ஆபத்து என்ற ஒரு அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது மட்டுமே மனப் போக்கையும் ,பழக்க வழக்கங்களையும்  மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தைப்  பலர்  உணருகிறார்கள்.

ஆகவே  அச்சம் அல்லது பயம் தான் பெரும்பாலும் நன்மைக்குத் திறவு கோலாக அமைகிறது.நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி , நண்பர்களோடும் சரி , இந்த பயம் தான் நன்னடத்தைக்கும் ,நல்ல மாற்றங்களுக்கும் முக்கியக் காரணமாகும் . .நாம் வாழும் காலத்தில் நம்முடைய பெற்றோர் ,உடன் பிறந்தவர்கள் ,நண்பர்கள் இவர்களுடைய உறவை,நட்பை,பாசத்தை இழந்து விடுவோமோ என்ற ஒரு பயம் வருகிறது அதனால் அவர்களை சந்தோஷப் படுத்தி அவர்கள் அன்பு ,நட்பு ,பாசம் இவற்றைப் பெரும் பொருட்டே நல்ல நடத்தையை மேற்கொண்டு நல்லவர்களாக நடந்து கொள்கிகிறோமே தவிர  எப்பொழுதும் நல்லதையே பேச வேண்டும் ; நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற உணர்வினால் அல்ல. 

ஆன்மீக வழியை எடுத்துக் கொண்டால் , நமக்கு எது நல்லது என்பதை நாம் அறிவோம் .இருந்தும் கூட நம் எண்ணங்களை ,மனப் போக்கை ,பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதை சிரமமாக உணருகிறோம் . நம்மில் பலருக்குக் கடவுள் இருக்கிறார் என்ற அறிவு இருந்தாலும் ,எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரம் பொருளை நேரில் பார்த்த அனுபவம் இல்லை .ஆகையால் ,நாம் என்ன நினைக்கிறோம் என்றால் ,நம்மால் அறியப்படாத ஒருவர் அல்லது ஒன்று எப்படி நமக்குத் துன்பம் தர முடியும் என்று.

இதனால் நமக்குள் மாற்றம் நிகழாமலேயே போய்விட்டால் நம்முடைய வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடாதா ? இதற்கு ஒரே வழி நாம் குருவிடமும் இறைவனிடமும் அன்பும் பக்தியும் செலுத்துவதுதான் .குருவிடமிருந்தும் இறைவனிடமிருந்தும் கிடைக்கும் கருணையும் அருளும் விவரிக்க முடியாத இனிமையும் பெருமையும் நிறைந்தது ஆகும் . 

அப்படிப்பட்ட கருணையையும் அருளையும் எங்கே இழந்து விடுவோமோ என்ற பயமே நம்மை நேரான ,சரியான பாதையில் நடத்திச் செல்லும் . அதுமட்டுமல்ல .நமக்குள் ஆன்மீக ரீதியில் எந்த முன்னேற்றமோ அல்லது மாற்றமோ நிகழவில்லை என்றால்  குருவின் மற்றும் ,கடவுளின் கோபத்திற்கும் சீற்றத்திற்கும் ஆளாகி விட்டால் ஏற்படும்  விளைவுகளை எண்ணி பயந்து ,துன்பமும் வலியும் நிறைந்த நேர்மையான வழியில் செல்ல முற்படுவோம் . குருநாதர் மீதும் கடவுளின் மீதும் நமக்கு இருக்கும் பயமே அவர்கள் மீது அதிக அன்பையும் பக்தியையும் ஏற்படுத்தும் .

பயம் என்பது அன்பைப் பெறவும் பக்தி செய்யவும் ஒரு தூண்டுதல் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். .ஏனென்றால் பக்தியும் பயமும் ஒன்றாக இணைந்த உணர்வுகள் .இவை இரண்டுமே நம்முடைய மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெரிதும் துணை புரியும் என்பதில் நெல்முனையளவும் ஐயமில்லை .

With thanks for translation to Mrs Meena Ram

வெள்ளி, 12 ஜூலை, 2013

நற்குணங்களும் மனத்தூய்மையும்

 இந்த உலகமென்னும் மேடையில் பல்லாயிரக்கணக்கானோர் தங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள பாத்திரங்களை சிறந்த முறையில் நிர்வகித்து வருகின்றனர் .அதாவது கணவன் -மனைவி ,தாய் -தந்தை ,மகன்-மகள்  முதலாளி -தொழிலாளி ,சமூக சேவகர்  மற்றும் இன்னும் எத்தனையோ உறவுகள் அவரவர் தம்முடைய கடமையை சிறப்பாகச் செய்து வருகின்றனர் . இவர்கள் நல்ல மனிதர்கள் என்று குறிப்பிடப் படுகின்றனர்.இவர்கள் சமுதாயத்தின் , குடும்பத்தின்  தூண்களாகக் கருதப் படுகின்றனர் 
இந்த நல்ல மனிதர்கள் ,ஆன்மீகப் வழியில் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பினால் ,தினசரி வாழ்வில் ,மற்றும் சில கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும் .

நல்ல மனிதன் - தூய மனிதன் - இந்த வார்த்தைகளின் உபயோகம் உலகியல் மற்றும் ஆன்மிகம் ,இரண்டிலும் வேறு வேறாக மாறுபட்டுக் காணக் கிடைக்கிறது .  அன்றாட வாழ்வில் நம் பேச்சில் நல்லவர் என்ற வார்த்தையைப்  அதிகமாக உபயோகிக்கிறோம் .

உதாரணத்திற்கு ஒரு நல்ல தாய் ,ஒரு நல்ல தகப்பன் ,ஒரு நல்ல ஆசிரியர் ,ஒரு நல்ல தொழிலாளி ,ஒரு நல்ல சமூக சேவகர் இவர்கள் தங்கள் கடமைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்பவர்களாக இருப்பார்கள் .
தங்கள் சக்திக்கும் மீறிய நல்ல செயல்களில் ஈடுபடுபவர்களாக ,மனித சமுதாயத்தின் உயர்வுக்குப் பாடுபடுபவர்களாக ,ஏழைகளுக்கு உதவி செய்பவர்களாக ,இரவு பகல் பாராமல் சமூக சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களாக இருக்கலாம் . ஆன்மீக நோக்கில் பார்த்தோமானால் ,இவைகளெல்லாம் நல்ல செயல்கள் என்றே கூறலாம் .ஆனால் தூய செயல்கள் என்று வகைப் படுத்த இயலாது . 

இறைவனின் பெயரைச் சொல்வதினால் ,அதாவது இறைவனின் நாமத்தை அல்லது இறை மந்திரத்தை ஜபம் செய்வதினால் மட்டுமே  ஒரு மனிதன் தூய்மை அடைகிறான். அப்படி நாம ஜபம் செய்யும் பொழுது ,அந்தப் பவித்ரமான நாமத்தின் தூய்மைப்படுத்தும் சக்தியானது உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆன்மீக அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் . இந்த அதிர்வுகள் உடலின் ,மனதின் ,உணர்வுகளின் உள்ளே ஊடுருவி வியாபிக்க  வேண்டும். இந்த நிலையில் ஒருவர் முழுமையாகத் தூய்மை அடைகிறார் 
.அதோடு தியானத்தோடு கூடிய மந்திர ஜபம் ஆத்ம சுத்திக்கு பெரிதும் உறுதுணையாய் இருக்கும்..

எனவே ராம நாமத்தை  இடைவிடாமல் இரவு பகல் எந்நேரமும் ஸ்மரணை செய்யுங்கள்.

நல்ல மனிதர் என்ற பெயரோடு மனத் தூய்மை மற்றும் ஆத்ம சுத்தியும் அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல் படுங்கள் .

With thanks for translation to Mrs Meena Ram

வியாழன், 11 ஜூலை, 2013

ரோஜாச் செடியும் ராம நாமத்தின் நறுமணமும்

 ஒரு ரோஜா மலர் தன்னுடைய மென்மையான அழகாலும் அதிலிருந்து வீசும் நறுமணத்தாலும் நம்மை அதனிடம் ஈர்க்கிறது . ஆனால் நாம் ரோஜா மலரின் அருகில் செல்லும் போது அதில் உள்ள முட்களிடம் கவனமாக இருக்க வேண்டும் .முட்கள் இல்லாத ரோஜா செடியே கிடையாது அல்லவா !  
நம்முடைய உடலை முட்கள் நிரம்பிய  ரோஜா செடிக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம் இதில்  காமம் ,குரோதம் ,மோஹம் ,பொறாமை ,பேராசை ,கர்வம் ,நான்  எனது என்கிற அஹம்காரம் ஆகிய  கூரிய முட்கள் வளர்ந்து நம்மை நெருங்குபவர்களைக்  குத்திக் கிழிக்கின்றன .  

ஆயிரம் இதழ்கள் உடைய  தாமரை மலரை கொண்டிருக்கும்  நம்முடைய சஹஸ்ராரம்  எனும் உச்சந்தலை ஒரு ரோஜாவைப் போன்றது. .நாம்  எப்பொழுது இறைவனிடத்தில் அத்யந்த பக்தியும்  அன்பும் 

செலுத்துகிறோமோ அப்பொழுது  இந்த சஹஸ்ராரம் மலர்ந்து நறுமணம் பரப்பி மிகுந்த  பொலிவுடன்  தோற்றமளிக்கும் .  

அதனால் ஒரு மனிதன்  அற்புதமான பயனை அடைகிறான்  .அவனுள்ளிருக்கும் இறை  பக்தியானது மேலே குறிப்பிட்ட முட்கள் அனைத்தையம் மழுங்கச் செய்து விடுவதால் ,அவனிடம் வருவதற்கு யாரும் தயங்க மாட்டார்கள் . மாறாக மகிழ்ச்சியே அடைவார்கள் .

ரோஜா மலர் மலரும்பொழுது எப்படி அழகுடனும் நறுமணத்துடனும் காட்சியளிக்கிறதோ அதே போல் நம்முள் இறைவன் பால் பக்தி மலரும் பொழுது அந்த பக்தியின் காந்தியும் நல் வாசனையும் ,இறைவனின் அருளும் நம்மை அந்தப் பரம் பொருளின் வசம் ஈர்க்கின்றன . அப்பொழுது நாம் நம்முள் இருக்கும் முட்களாகிய எதிர்மறை எண்ணங்கயும் ,குணங்களையும் இறைவனின் அன்பையும் அருளையும் தேடும் பாதையில் செலுத்தி ஆனந்தமாக வாழ முடியும்.  

ஒருவருடைய வாழ்க்கையில் இப்படி நறுமணம் வீச விரும்பினால் இதோ ஒரு சுலபான வழி உள்ளது . இடைவிடாது  ,முறையாக "ராம நாம"  ஜபம் செய்யுங்கள் .உங்களிடமிருந்து வீசும் தூய பக்தியின் நறுமணத்தால் இறைவன் உங்கள் வசமாவான் .

                                 சீதாராம் !

With thanks for translation to Mrs Meena Ram

புதன், 10 ஜூலை, 2013

தாரக மந்திரம் - ராம நாமம்

ராம மந்திரம் தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது . சம்ஸ்கிருதத்தில் தாரகை என்றால் நட்சத்திரம் என்று அர்த்தம்.   விண்வெளியில் ஒளி வீசி பிரகாசிக்கும் நட்சத்திரமானது எப்படி திசை தெரியாமல் கடலிலோ வெட்டவெளியிலோ பயணம் செய்யும் ஒரு பிரயாணிக்கு வெளிச்சம் தந்து சரியான வழியைக் காட்டுகிறதோ அதே போல்  இந்த ராம நாமம் என்ற தாரக மந்திரம் நம்மை பிறவிப் பிணியிலிருந்து விடுவித்து முக்தியைக் கொடுக்கும் சக்தி உடையது ஆகும் .

இந்த உலக வாழ்க்கை என்னும் கடலைக் கடப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.  ஆனால்,  இதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது .
ஆம் ! சித்த புருஷரான ஒரு சிறந்த குருவாலும் அவர் உபதேசிக்கும் மந்திரத்தாலும் மிக எளிதாக இந்த பவ சாகரத்தைக் கடக்க முடியும்.  குருவருள் படகாகவும் ,மந்திரம் துடுப்பாகவும் துணை நின்று  நம் வாழ்க்கை சரியான பாதையில் சரியான திசையில்  வெகு எளிதாகச் செல்ல உதவும் .இது சத்தியம் .  

எனவே  இடைவிடாது இந்த ராம நாமத்தை ஜபம் செய்யுங்கள் :"சீதாராம் "

With thanks for translation to Mrs Meena Ram

செவ்வாய், 9 ஜூலை, 2013

ஓம் கணேசாய நமஹா :


என்னுடைய இந்த  வலைபதிவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.  எல்லாம் வல்ல இறைவன் மீது தணியாத தாகமும், இடைவிடாத தேடலும் கொண்டு வாழ்வில் அன்பும்,சாந்தியும் பெற விரும்பும்  அனைவரும் என்னோடு இந்த அருமையான புனிதமான பயணத்தில் இணைந்து பயன் பெற வேண்டுகிறேன் . 

இந்தப் ஆன்மீகப்  பயணத்தைத் துவங்கு முன்பு நம்முடைய  இந்த முயற்சி வெற்றி பெற நல்லாசிகள்  வேண்டி  முழு முதல் கடவுளாகிய ஸ்ரீ விநாயகப் பெருமானைத் தொழுது வணங்குவோம் .  எந்த ஒரு வேலையையும் தொடங்கும் முன்பு விநாயகப் பெருமானை மனதில் நினைத்து அவரிடம்  பிரார்த்தனை செய்யுங்கள் .நம் உடலில் மூலாதார சக்ரத்தில் அந்த விநாயகர் சூட்சுமமாக விளங்குகிறார் .  அந்த இறைவனை உங்களுக்குள் தேடுங்கள் . நீங்கள் செய்யும் செயல்களில் ஏற்படும் தடைகளையும் இடையூறுகளையும் அழிக்கும் அந்த இறைவன் விக்னங்களைப் நீக்கும் விக்னேஸ்வரன் ஆவார் .

அவரே பிரணவம் ! அவரே ஓம்காரம் !! அவரே மெய்ஞ்ஞானத்தின் உச்சம் !!!  அப்படிப்பட்ட அவருடைய கருணையால் நீங்கள் தேடும் ஞானம் உங்களுக்கு நிச்சயமாகக்  கிடைக்கும்.

நம் அனைவருக்கும்  சக்தியையும்  ஆற்றலையும் வழங்க வல்ல ரித்தி ,சித்தி என்ற இரு தேவதைகள், விநாயகருக்குத் தொண்டு செய்பவர்களாக விளங்குகின்றனர். இந்த தேவதைகள் ,விநாயகப் பெருமானை  மனமாற வழிபடுவோருக்கு ஆன்மீக சக்தியை வழங்கி அவர்கள் இந்த உலகியல் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றனர்.

With thanks for translation to Mrs Meena Ram